வருகிற மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என பாஜக துணை அமைப்புகளிடம் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தான பானர்ஜி தெரிவித்தார். இதுதொடர்பாக ஆந்திராவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இந்த தேர்தலின் முடிவில் மொத்தமுள்ள 543 இடங்களில் பாஜக வெறும் 125 இடங்களில் தான் வெற்றிபெறும். எனவே பாஜக துணை அமைப்புகள் தயவு செய்து நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு ஆதரவு அளிக்க வேண்டாம். ஏனென்றால் இந்த தேர்தல் மிகவும் சிறப்பானது. இந்த நாட்டுக்காக போராடுகிறவர்கள் மிகக்குறைவு. அதில் ஒருவர் தான் சந்திரபாபு நாயுடு. எனவே அவருக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
மேற்கு வங்கத்தில் பாஜக-வால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது. 2014 தேர்தலின்போது ஆந்திரா, கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸா ஆகிய மாநிலங்களில் மொத்தமுள்ள 191 இடங்களில் பாஜக வெறும் 21 இடங்களில் தான் வெற்றிபெற்றது. அதேபோன்று சமாஜவாதி, பகுஜன் சமாஜ் பிரிந்திருந்ததால், உத்தரப்பிரதேசத்தில் 73 இடங்களில் வென்றது.
ஆனால், இம்முறை காட்சி வேறு, இம்மாநிலங்களில் பாஜக-வால் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாது. கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒருமுறை கூட பத்திரிகையாளர்களை சந்தித்தது இல்லை. ஆனால், தன்னை 56 இன்ச் மார்பளவு கொண்ட மாவீரன் என்று பேசிக்கொண்டிருக்கிறார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பயங்கரவாதம் அதிகரித்துள்ளது. அரவிந்த் கேஜரிவால் கோரிக்கையை ஏற்று தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.