ஜனநாயகத்தின் மீதும், மக்கள் மீதும் பாஜகவுக்கு நம்பிக்கையில்லை; அதனால்தான் உண்மையை நாட்டு மக்களிடையே அவர்கள் தெரிவிப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதி பொதுச் செயலாளர் பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் சிக்ரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரியங்கா திங்கள்கிழமை பேசியதாவது:
பாஜக அரசுக்கு மக்கள் மீதும் நம்பிக்கையில்லை; ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையில்லை. அவர்கள் உண்மையான தேசியவாதிகளாக இருந்தால், அவர்கள் ஆட்சியில் மக்கள் படும் துயரம் குறித்த உண்மையை வெளியில் கூறியிருப்பார்கள். நம் நாட்டின் ஜனநாயகம் உண்மையை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டது. உண்மையை மறைத்து மக்களிடம் பொய்யை பரப்புபவர்கள் நிச்சயம் ஆட்சியில் இருந்து அகற்றப்படுவார்கள். பாஜக அதற்கு விதிவிலக்கல்ல.
தேர்தல் நேரத்தில் மட்டும் தேசியவாதம் குறித்தும், பாகிஸ்தான் குறித்தும் பாஜக பேசுகிறது. ஆனால் உண்மையில் அவர்கள் நமது நாட்டை குறித்துதான் பேச வேண்டும்.
நமது நாட்டு இளைஞர்களுக்காக, விவசாயிகளுக்காக, வறுமையில் வாடும் மக்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள் என்பது குறித்து பேச வேண்டும். பெண்களுக்காகவும், பெண்கள் பாதுகாப்புக்காகவும் அரசு என்ன திட்டங்களை மேற்கொண்டுள்ளது என்பது குறித்து பேச வேண்டும்.
வேலையின்மையின் வருத்தத்தை இளைஞர்களின் கண்ணில் நான் கண்டுள்ளேன். கடனை அடைக்க முடியாது, உருளைகிழங்கு விவசாயிகள் படும் துயரம் குறித்தும் நான் அறிவேன்.
உண்மையை நாட்டுக்கு உணர்த்துவதற்காக, தனது நீண்ட கால உழைப்புக்கு வருமானமாக கிடைத்த ரூ. 490 பணத்தை பிரதமருக்கு விவசாயி ஒருவர் அனுப்பி வைத்தார்.
ஆனால் இவற்றையெல்லாம் நாட்டு மக்களுக்கு தெரிவிக்காமல், வெறும் விளம்பரங்களைச் செய்து உண்மையை பாஜகவினர் மறைக்கின்றனர் என்றார் பிரியங்கா.