ஜார்க்கண்ட் மாநிலம், கிரிதிஹ் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் திங்கள்கிழமை நடைபெற்ற மோதலில் 3 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் வீரர் ஒருவரும் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக நக்ஸல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கிரிதிஹ் மாவட்டத்தில் உள்ள பெல்பா மலைப்பகுதியில் நக்ஸலைட்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்து மத்திய ரிசர்வ் காவல் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி நக்ஸலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். அதையடுத்து இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. சிறிது நேர மோதலுக்கு பின்னர், நக்ஸலைட்டுகள் அடர் வனப் பகுதிக்குள் தப்பியோடி விட்டனர்.
அதன் பின்னர், வனப் பகுதியில் காவல் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, 3 நக்ஸலைட்டுகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. நக்ஸலைட்டுகள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து ஏகே-47 ரக துப்பாக்கிகள், சிறிய ரக குண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த மோதலில், மத்திய ரிசர்வ் காவல் படையின் வீரரும், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவருமான பிஸ்வஜித் செüகான் உயிரிழந்தார். அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறினர்.
14 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏப்ரல் 29-ஆம் தொடங்கி 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, நக்ஸலைட்டுகளால் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் தடுக்க, நக்ஸல் அச்சுறுத்தல் அதிகம் இருக்கும் இடங்களில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.