இதய பாதிப்பு சிகிச்சைக்காக பச்சிளம் குழந்தையுடன், கர்நாடக மாநிலம், மங்களூரில் இருந்து கொச்சிக்கு ஐந்தரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது. அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு-ஆதரவால் இது சாத்தியமானது.
மங்களூரில் இருந்து கொச்சி செல்வதற்கு சுமார் 400 கிலோ மீட்டரை கடக்க வேண்டும். இந்தத் தொலைவை சாலை மார்க்கமாக கடக்க குறைந்தது 9 மணி நேரமாவது ஆகும்.
இதய பாதிப்பால் விரைவாக சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த, பிறந்து 15 நாள்களே ஆன குழந்தையை உறவினர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்க திட்டமிட்டிருந்தனர். மங்களூரில் இருந்து திருவனந்தபுரம் செல்ல சுமார் 12 நேரம் ஆகும். இரு நகரங்களுக்கு இடையேயான தொலைவு 600 கிலோ மீட்டர்.
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, இந்த விவகாரத்தில் தலையிட்டு கொச்சியில் உள்ளஅம்ருதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு குழந்தையின் உறவினர்களை வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து குறைந்த பயண தூரத்தில் குழந்தை கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை காலை 11
மணியளவில் ஆம்புலன்ஸ் மங்களூரில் இருந்து புறப்பட்டது.
குழந்தையின் உயிரைக் காப்பதற்காக ஆம்புலன்ஸ் தடையின்றி விரைந்து செல்வதற்கு உதவி புரியுமாறு பொதுமக்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். இது, சமூக வலைதளங்களிலும் மிக வேகமாகப் பரவி மக்களிடம் சென்றடைந்தது. இரு மாநில பொதுமக்களும், அரசு அதிகாரிகளும் எந்தவித தடையுமின்றி ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி அமைத்து உதவினர்.