முஸ்லிம் என்பதால் என் தந்தையை குறி வைக்கின்றனர்: ஆஸம் கானின் மகன் கூறுகிறார்
என் தந்தை முஸ்லிம் என்பதாலேயே குறி வைத்து தாக்குகின்றனர்' என்று ஆஸம் கானின் மகன் அப்துல்லா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதாவுக்கு எதிராக சமாஜவாதி கட்சித் தலைவர்களில் ஒருவரான ஆஸம் கான் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தால் அவரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் ராம்பூரில் ஆஸம் கானின் மகன் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியது: ராம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் ஜெயப்பிரதா தன்னுடைய சுட்டுரைப்பக்கத்தில், ஒரு அரக்கனின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவே தான் ராம்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவித்திருந்தார். அவர் நேரடியாக எனது தந்தையை குறிப்பிட்டே பதிவிட்டிருந்தார். ஆனால், அவரது கருத்துக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. அதேசமயம், எனது தந்தை அவரது பெயரையோ, பாலினத்தையோ குறிப்பிடாமல் கருத்து தெரிவித்திருந்தார். என் தந்தை ஒரு முஸ்லிம் என்பதால்தான் பிரசாரம் மேற்கொள்ள தடை விதித்து விட்டனர் என்றார் அவர்.
முன்னதாக, ஆஸம் கான் மீது தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
மேலும், அவரை தகுதி நீக்கம் செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு ஜெயப்பிரதா கடிதம் அனுப்பியதையடுத்து, ஆஸம்கான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டார்.