இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துவ தேவாலயம், நட்சத்திர விடுதிகள் என 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இந்த தொடர் குண்டுவெடிப்பில் சுமார் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக முதலில் தகவல்கள் வெளியானது. எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் பதிவிட்டுள்ள தொடர் டிவீட்களில்,
"இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் திலக் மரபனாவிடம் பேசினேன். இந்த குண்டுவெடிப்பில் துரதிருஷ்டவசமாக 207 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 450 பேர் காயமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை இந்தியத் தூதரகத்திடம் தேசிய மருத்துவமனை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் பெயர் லக்ஷ்மி, நாராயண் சந்திரசேகர் மற்றும் ரமேஷ் ஆகும். கூடுதல் தகவல்களை சேகரித்து வருகிறோம்.
இந்தியா அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். தேவைப்பட்டால் மருத்துவக் குழுவையும் அனுப்ப தயாராக இருக்கிறோம்" என்றார்.