தேர்தல் பணியின் போது உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் நிவாரண நிதியை ரூ.15 லட்சமாக உயர்த்தி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு புதன்கிழமை அளித்த பேட்டி:-
தேர்தல் பணியின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தேர்தல் பணியில் இருக்கும் ஒருவர், பயங்கரவாதத் தாக்குதலில் இறந்தால் அவரது குடும்பத்துக்கு வழக்கமாக வழங்கும் நிதி ரூ.25 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிதி உயர்வின் அடிப்படையில், தமிழகத்தில் தேர்தல் பணியின் போது உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு விரைவாக நிதியுதவி அளிக்கப்படும். சில இடங்களில் வாரிசு யார் என்ற ஆவணங்களைப் பெற வேண்டிய நிலை உள்ளதால் சற்று காலதாமதம் ஏற்படுகிறது.
4 பேரவைத் தொகுதிகள்: தமிழகத்தில் காலியாகவுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட மாவட்டங்களில் இதுவரை ரூ.6.84 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஓட்டப்பிடாரத்தில் மட்டும் ரூ. 6.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நெறிமுறைகளில் எந்தத் தளர்வும் செய்யப்படவில்லை என்று சத்யபிரத சாகு தெரிவித்தார்.