பாஜகவின் இளம் தொண்டர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜைக் காட்டிலும் பெரிய உத்வகேம் இருக்காது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய வெளியுறவு முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் கடந்த 6-ஆம் தேதி உயிரிழந்தார். அவருடைய மறைவையொட்டி இன்று தில்லியில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,
"சுஷ்மா ஸ்வராஜ் தனது சொந்த வாழ்க்கையில் நிறைய சாதித்தபோதிலும், எந்த பணியைக் கொடுத்தாலும் அதற்கு தன்னையை அர்ப்பணிப்பார். பாஜக இளம் தொண்டர்களுக்கு அவரைக் காட்டிலும் பெரிய உத்வேகம் இருக்க முடியாது. வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் பிரச்னைகளை தனது சொந்தப் பிரச்னைகளாக நினைத்துக்கொள்வார். வெளியுறவு அமைச்சகத்தின் குணத்தையே அவர் முற்றிலுமாக மாற்றினார். கடந்த 70 ஆண்டுகளில் நாட்டில் 77 பாஸ்போர்ட் அலுவலகங்கள் இருந்தது. அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில், தற்போது இந்தியாவில் 505 பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளது. இதிலிருந்தே அவரது பணியின் வீரியத்தை நாம் உணரலாம்.
ஐ.நா சபையில் நான் எனது முதல் உரையை நிகழ்த்துவதற்குத் தயாராக இருந்தேன். அவர், என்னுடைய உரை எங்கே என்று கேட்டார். நான் எழுதிக்கொள்ளாமலே உரையாற்றுவேன் என்று அவரிடம் தெரிவித்தேன். ஆனால், அவர் அதை கடுமையாக எதிர்த்தார். இதையடுத்து, அவருடன் இணைந்து முந்தைய நாள் இரவு உரையைத் தயார் செய்தோம்.
பின்னர் அவர் என்னிடம் தெரிவித்தார், நீங்கள் எவ்வளவு பெரிய பேச்சாளராக வேண்டுமானாலும் இருக்கலாம், அவைகளுக்கு என்று ஒரு சில நல்லொழுக்கங்கள் உள்ளது. அதற்கான பயிற்சிகள் மிக முக்கியம் என்றார். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் இது" என்றார்.
இந்த இரங்கல் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மற்ற சில பாஜக மூத்த தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.