முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
வாஜ்பாய் மகள் நமிதா கௌல் பட்டாச்சார்யா மற்றும் பேத்தி நிஹாரிகா உள்ளிட்டோரும் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் (93), 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த 1996 (13 நாட்களும்), 1998-99 (13 மாதங்களும்) மற்றும் 1999-2004 ஆகிய ஆண்டுகளில் 3 முறை பிரதமராக பதவி வகித்தார்.
அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த தினமான டிசம்பர் 25-ஆம் தேதி நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது. 2014-ஆம் ஆண்டு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். வாஜ்பாய் மறைவையடுத்து நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவரது உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்து கௌரவித்தார்.