காஷ்மீர் விவகாரம் இந்தியாவும், பாகிஸ்தானும் சம்பந்தப்பட்டது என்பதில் பிரிட்டன் தெளிவாக இருக்கிறது என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.
பிரிட்டனின் புதிய பிரதமராக கடந்த வாரம் பதவியேற்ற பிறகு, சர்வதேச தலைவர்களை தொலைபேசியில் அழைத்து போரிஸ் ஜான்சன் பேசி வருகிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடியை செவ்வாய்க்கிழமை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, இரு தலைவர்களும் காஷ்மீர் விவகாரம் குறித்து கலந்துரையாடினர். இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்தார் என்று பிரிட்டன் பிரதமர் அலுவலக செய்தித்தொடர்பாளர் கூறினார்.
லண்டனில் இந்தியத் தூதரகத்துக்கு வெளியே கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் இந்தியர்கள் ஈடுபட்டபோது, பாகிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவத்துக்கு போரிஸ் ஜான்சன் மோடியிடம் வருத்தம் தெரிவித்தார்.