தில்லி: ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வந்து சென்றுள்ள நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ந்துள்ளனர்.
கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. இந்த நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதைத் தொடர்ந்து, கருப்புப் பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் முன்ஜாமின் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த 2 மனுக்களையும் தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். வீட்டில் ப.சிதம்பரம் இல்லாத நிலையில் அதிகாரிகள் திரும்பி சென்றனர். அதன் பிறகு தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் ப.சிதம்பரம் வீட்டிற்கு வந்து உள்ளனர்.