மதுரையில் உள்ள பூச்சியியல் மருத்துவ ஆராய்ச்சி மையத்தை புதுச்சேரிக்கு மாற்றுவதற்கு தடை கோரிய வழக்கில், அரசின் முடிவு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு: மதுரை சொக்கிகுளத்தில் 32 ஆண்டுகளாக பூச்சியியல் மருத்துவ ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் கொசுக்களால் பரவும் நோய்கள், அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது. இங்குள்ள அருங்காட்சியகத்தில் ஆயிரக்கணக்கான கொசுக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இம்மையத்தை புதுச்சேரிக்கு மாற்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இந்த மையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டால் தமிழகத்திற்கு தான் இழப்பு. எனவே மதுரையில் உள்ள பூச்சியியல் மருத்துவ ஆராய்ச்சி மையத்தை புதுச்சேரிக்கு மாற்றாமல் இருக்க உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மதுரையில் உள்ள பூச்சியியல் மருத்துவ ஆராய்ச்சி மையத்தை புதுச்சேரிக்கு மாற்றுவது தொடர்பான அரசின் முடிவு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் மதுரையில் உள்ள பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.