இந்தியாவில் தற்போது காணப்படும் பொருளாதார மந்த நிலை கடந்த 70 ஆண்டுகளில் அரசு எதிர்கொள்ளாதது என நீதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:
அரசு கடந்த 70 ஆண்டுகளில் சந்திக்காத கடுமையான பொருளாதாரச் சூழலை தற்போது எதிர்கொண்டுள்ளது. கடுமையான நிதி நெருக்கடி நிலைமை நிதித் துறை முழுவதையுமே வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
நிதி ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்கவும், பொருளாதார வளர்ச்சியை மந்தகதியிலிருந்து மீட்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கி எடுத்த பல்வேறு சீரிய முயற்சிகளால் ரொக்க கையிருப்பு நிலை நிலைத்தன்மை உடையதாக மாறியுள்ளது. மேலும், பொதுத் துறை வங்கிகளும், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு தேவையான நிதி வசதியை உருவாக்கி தருவதில் முன்னுரிமையுடன் செயல்பட்டு வருகின்றன.
பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்வதற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தீவிரமாக ஆலோசித்து வருகிறது என்றார் அவர்.
ரூபாய் மதிப்பில் முன்னேற்றம்: அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், பின்னர் முன்னேற்றம் கண்டது.
ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை வர்த்தகத்தில் எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு 26 காசுகள் குறைந்து 71.81-ஆனது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அந்நியச் செலாவணி சந்தையில் தொடக்கத்தின்போது ரூபாயின் மதிப்பு ரூ.71.93 ஆக காணப்பட்டது. இது, ஒருகட்டத்தில் 72.05 வரை சரிவடைந்தது. நடப்பாண்டில் முதல் முறையாக ரூபாயின் மதிப்பு 72-ஐ தாண்டி வீழ்ச்சி கண்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவு, டாலர் வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வர்த்தகத்தின் இறுதியில் ரூபாயின் மதிப்பு 15 காசுகள் அதிகரித்து 71.66-ஆக எழுச்சி கண்டது.