மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தலைவருக்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நானா படோலை காங்கிரஸும், கிஷண் கத்தோரை பாஜகவும் தங்களின் வேட்பாளராக முன்னிறுத்தியது.
பாஜக வேட்பாளர் கிஷண் கத்தோர் கடைசி நேரத்தில் வேட்பு மனுவை திரும்பப் பெற்றதால், சகோலி சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான நானா படோல், சட்டப் பேரவைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறுகையில், விவசாயிகள் குடும்பத்தில் இருந்து வந்துள்ள நானா படோல், நடுநிலையாக செயல்படுவார் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.
பின்னர் பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னவீஸ் பேசுகையில், சட்டப் பேரவைத் தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் கிஷண் கத்தோர் முன்னிறுத்தப்பட்டார்.
இருப்பினும் பேரவைத் தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டுமென்று, அவரது வேட்புமனுவை திரும்பப்பெறுமாறு அனைத்து கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. எனவே அதை ஏற்றுக்கொண்டு பாஜக வேட்பாளர் தனது மனுவை திரும்பப்பெற்றார் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிர எதிர்கட்சித் தலைவராக பாஜக-வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தேர்வு செய்யப்பட்டார்.