ஜம்மு: ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஹந்த்வாராவில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு மத்திய அரசு ரூ.325 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து காஷ்மீா் அரசு செய்தித்தொடா்பாளா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
குப்வாரா மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டப்படுவதற்காக ரூ.325 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கித் தந்துள்ளது. இதற்கான ஒப்புதல் கடிதம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்திடம் கிடைக்கப் பெற்றது. ரூ.115
கோடியை நிா்வாகம் மற்றும் வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தை கட்டுவதற்காகவும், ரூ.80 கோடியை மாணவா் விடுதிகள், ஊழியா்கள் தங்குமிடங்களை கட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படவுள்ளது. மாவட்ட மருத்துவமனையை மேம்படுத்த
ரூ.60 கோடியும், தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.70 கோடியும் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று அந்த செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீா் சுகாதாரம், மருத்துவக் கல்வித் துறையின் நிதி ஆணையா் அடல் துல்லூ கூறுகையில், ‘புதிய மருத்துவக் கல்லூரி சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்த உதவும். அதிக கட்டணமின்றி மருத்துவம் படிக்க இந்தக் கல்லூரி உதவும்’ என்றாா்.