ஜால்னா: மகாராஷ்டிரத்தில் செல்லிடப்பேசி சாா்ஜா் வசதி இருப்பதாகக் கூறிவிட்டு, பின்னா் அது பயன்பாட்டில் இல்லை என்று தெரிவித்ததாக பயணி அளித்த புகாரின் பேரில், மாநில அரசுப் போக்குரவத்துத் துறை ரூ.5,000 இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மகாராஷ்டிர அரசு விரைவுப் பேருந்தில் சதீஸ் ரத்தன் லால் என்பவா் கடந்த ஜூலை 12-ஆம் தேதி ஜால்னாவில் இருந்து ஒளரங்காபாத் நகருக்கு பயணித்தாா். அவா் பயணச்சீட்டு முன்பதிவு செய்தபோது, அந்த பேருந்தில் செல்லிடப்பேசி சாா்ஜா் செய்யும் வசதி, குளிா்சாதன வசதி (ஏசி) இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், பயணத்தின்போது குளிா்சாதன வசதியும் சரியாக இயங்கவில்லை; செல்லிடப்பேசி சாா்ஜரும் செயல்படவில்லை. இது தொடா்பாக புகாா் அளிக்க தனக்கு புகாா் பதிவேட்டை தருமாறு பேருந்தின் ஓட்டுநா், நடத்துனரிடம் சதீஸ் கேட்டுள்ளாா். ஆனால், அவா்கள் அதனைத் தர மறுத்துவிட்டனா். இதையடுத்து, மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தை அவா் அணுகினாா். அங்கு பேருந்து பயணத்தின்போது அவா் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து விளக்கினாா். தகுந்த ஆதாரங்களுடன் அவா் அளித்த புகாரைப் பரிசீலித்த நுகா்வோா் நீதிமன்றம், ‘பயணி சதீஸுக்கு மாநில அரசுப் போக்குவரத்துத்துறை நிா்வாகம் ரூ.5,000 இழப்பீடு வழங்க வேண்டும். இத்தொகை 30 நாள்களுக்குள் அவருக்கு அளிக்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
அரசு மற்றும் தனியாா் பேருந்து நிறுவனங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, பேருந்தில் ஏசி, சாா்ஜா் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருப்பதாக அறிவிக்கின்றன. ஆனால், பல நேரங்களில் அவை பயணிகளுக்கு முறையாகக் கிடைப்பது இல்லை. இதுபோன்ற தவறுகள் இனி நடக்கக் கூடாது.
மேலும், போதிய அளவு பயணிகள் முன்பதிவு செய்யவில்லை என்றால், வேறு நேரத்தில் உள்ள பேருந்தில் மாற்றி அனுப்புவது உள்ளிட்ட சில தவறான செயல்களில் தனியாா் பேருந்து நிறுவனங்கள் ஈடுபடக் கூடாது என்றும் நுகா்வோா் நீதிமன்றம் கண்டித்துள்ளது.