மகாராஷ்டிர அமைச்சரவை எப்போது அமையும்?
மகாராஷ்டிராவின் 'மகா விகாஸ் அகாதி முன்னணி' அரசின் அமைச்சரவை இன்னும் ஒரு சில தினங்களில் முடிவாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரத்தில் பல்வேறு கட்ட அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, கடந்த 28ம் தேதி மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றார். அவருடன் அமைச்சர்கள் 6 பேர் பதவியேற்றனர்.
மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைந்து ஒரு வாரம் ஆன நிலையில், அமைச்சரவை எப்போது அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிர விகாஸ் முன்னணி அரசின் அமைச்சரவை இன்னும் ஒரு சில தினங்களில் முடிவு செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
'மகாராஷ்டிரத்தில் அமைச்சரவை இன்னும் 2 அல்லது 3 தினங்களில் முடிவாகும். எந்தெந்த இலாகாக்கள் எந்தெந்தக் கட்சிக்கு வழங்குவது என்பது குறித்து கூட்டணியைச் சேர்ந்தவர்கள் கலந்தாலோசித்து முடிவு செய்வதால் சற்று கால தாமதம் ஆகிறது. விரைவில் மகாராஷ்டிரத்தில் முழு அமைச்சரவை பொறுப்பேற்கும்' என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், முந்தைய பாஜக அரசின் கனவுத் திட்டமான மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை மறுஆய்வு செய்வது, மும்பை மெட்ரோ ரயில் பணிமனை திட்டம் அமைப்பது போன்ற முக்கிய முடிவுகளை புதிய மகாராஷ்டிரா அரசு எடுத்துள்ளது. மேலும், மகாராஷ்டிர விவசாயிகளின் கடனை அரசு தள்ளுபடி செய்ததும் குறிப்பிடத்தக்கது.