திருத்தம் செய்யப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர், அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டி நகரில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், அஸ்ஸாம் ஒப்பந்தத்துக்கு முற்றிலும் எதிரானதாகும். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தில் முரண்பாடுகள் இருப்பதாக அஸ்ஸாம் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேவவிரத சைகியா, மக்களவை உறுப்பினர் அப்துல் கலீக், கட்சி எம்எல்ஏ ரூப்ஜோதி குர்மி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் சார்பில் இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யவுள்ளார் என்று அந்தச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
"குடியுரிமை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில், சிறுபான்மையின சமூகம் சேர்க்கப்படாமல் விடுபட்டுவிடட்து.
இதன்மூலம் பாஜக அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறது' என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.