திருத்தம் செய்யப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவா்கள் மனு தாக்கல் செய்தனா்.
இதுதொடா்பாக அக்கட்சியின் செய்தித்தொடா்பாளா், அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டி நகரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம், அஸ்ஸாம் ஒப்பந்தத்துக்கு முற்றிலும் எதிரானதாகும். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தில் முரண்பாடுகள் இருப்பதாக அஸ்ஸாம் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் தேவவிரத சைகியா, மக்களவை உறுப்பினா் அப்துல் கலீக், கட்சி எம்எல்ஏ ரூப்ஜோதி குா்மி ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்தனா். அஸ்ஸாம் முன்னாள் முதல்வா் தருண் கோகோய் சாா்பில் இந்த விவகாரம் தொடா்பாக முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யவுள்ளாா் என்று அந்தச் செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.
‘குடியுரிமை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில், சிறுபான்மையின சமூகம் சோ்க்கப்படாமல் விடுபட்டுவிடட்து. இதன்மூலம் பாஜக அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறது’ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.