இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் இந்தூர் மற்றும் போபாலில் நடத்தப்பட்ட ஹனிட்ராப் மற்றும் பிளாக்மெயில் வழக்கில் 400 பக்க குற்றப்பத்திரிகை திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தில் மிக முக்கிய அரசுப் பணிகளில் தங்களுக்கு சாதகமாக வேலைகளை நடத்திக் கொள்ள அப்பாவிப் பெண்களை இரையாக்கிய சம்பவம் தான் ஹனி-டிராப் முறைகேடு.
இந்தூர் மாநகராட்சி கண்காணிப்புப் பொறியாளர் ஹர்பஜன் சிங், தன்னை சிலர் ஆட்சேபனைக்குரிய வீடியோ கிளிப்புகளைக் காட்டி ரூ.3 கோடி கேட்டு மிரட்டுவதாக காவல்துறையை அணுகிய போதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த புகார் குறித்து விசாரித்த காவல்துறையினர், வழக்கில் தொடர்புடைய ஆர்த்தி தயால் (29), மோனிகா யாதவ் (18), ஸ்வேதா விஜய் ஜெயின் (39), ஸ்வேதா ஸ்வப்னில் ஜெயின் (48), பார்கா சோனி (34), ஓம்பிரகாஷ் கோரி (45) என்ற ஐந்து பெண்கள் மற்றும் இந்தூரில் ஒரு நபரையும் கைது செய்தனர்.
இவர்கள் மீது சட்டப் பிரிவு 370 (மனித கடத்தல்), 385 (மிரட்டி பணம் பறித்தல்) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையுடன் பல சாட்சிகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.