நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி-இன் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்கிழமை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொண்டனர்.
அப்போது வாஜ்பாயி குறித்து பிரதமர் மோடி பேசியதாவது:
அடல் பிஹாரி வாஜ்பாயி, மிக நீண்ட அரசியல் வாழ்க்கையை கொண்டவர். அதில் பெரும்பாலான நாட்களை அவர் எதிர்கட்சித் தலைவராகத் தான் கழித்தார். இருப்பினும், மக்களின் பிரச்னை தொடர்பான விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்பத் தவறியதில்லை. அதேபோன்று கொண்ட சித்தாந்தத்தில் உறுதிபட நின்றவர் என்று புகழாரம் சூட்டினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், எதிர்கட்சிகளின் மீது தனது வார்த்தையில் விமர்சனங்கள் இருக்குமே தவிர, மனதில் என்றும் வஞ்சம் இல்லாதவர். அடல் பிஹாரி வாஜ்பாயி, இதற்காகவே என்றும் நினைவுகூரப்படுவார் என புகழஞ்சலி செலுத்தினார்.