மக்களின் உரிமைகளை திருடிய இடைத்தரகர்கள் இன்று முற்றிலும் தூக்கியெறியப்பட்டுள்ளனர் என்று பிரதமர் மோடி பதிலடி அளித்துள்ளார். இதுதொடர்பாக ஹரியானாவில் நடைபெற்ற குருக்ஷேத்ரா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
நைஜீரியாவில் இருந்து வருகை தந்துள்ள விருந்தினர்களை வரவேற்கிறேன். மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ள தூய்மை இந்தியா திட்டம் குறித்து தெரிந்துகொள்ளவும், அதை நைஜீரியாவில் கட்டமைக்கவும் கடந்த வாரம் முதல் கல்வி சம்பந்தமான சுற்றுலாவுக்கு நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
வீட்டின் முன்பகுதியின் சுவர்களில் அழகான வண்ணம் தீட்டப்பட்ட வீடுகள் அடங்கிய பகுதி ஐரோப்பாவில் உள்ளது. அதை காண பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். அதேபோன்று இந்தியாவில் உள்ள கிராமங்களின் வீடுகளிளையும் காண சுற்றுலாப் பயணிகள் விரைவில் இங்கும் வருவார்கள்.
மக்களின் உரிமைகளை திருடிய இடைத்தரகர்கள், தற்போது நமது அமைப்பில் இருந்து முற்றிலும் தூக்கியெறியப்பட்டுள்ளனர். நேர்மையானவர்களின் நம்பிக்கையும், ஆதரவும் இந்த காவலன் (சௌகிதார்) மீது தான் உள்ளது. ஆனால், மோடியை விமர்சிப்பதிலும், நீதிமன்றம் மற்றும் சிபிஐ உள்ளிட்டவைகளை மிரட்டுவதிலும் தான் எதிர்கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது என்றார்.