வதேராவிடம் விசாரணை: மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை
நில மோசடி வழக்கில் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா மற்றும் அவரது தாயார் மெளரீன் ஆகியோரை நேரில் வரவழைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருப்பது மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் மாவட்டத்தில் நில மோசடி செய்ததாக ராபர்ட் வதேரா மற்றும் அவரது தாயார் மெளரீன் ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை இயக்குநரகம் சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி இருவரும் செவ்வாய்க்கிழமை ஆஜராகி இருந்தனர்.
இதுகுறித்து, கொல்கத்தா விமான நிலையத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து நிலைகளிலும் பாஜகவினரின் குறுக்கீடு இருந்துக் கொண்டேதான் உள்ளது. தற்போது, மக்களவைத் தேர்தலையொட்டி வதேரா மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறை இயக்குநரகம் மூலம் மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. தேர்தலுக்கு பிறகு மீண்டும் மோடியால் பதவியை கைப்பற்ற முடியாது என்பதை அவர் உணர வேண்டும்.
இன்னும், 15 நாள்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, மத்திய அரசு தன்னுடைய கடைசி நாள்களை எண்ணிக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.