அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல், தனது நண்பரும், இத்தாலியைச் சேர்ந்த வழக்குரைஞருமான சான்ட்ரோலி ரோஸ்மேரியை சந்திக்க தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.
முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து மிகமுக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர் வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றன. அந்த வழக்கில் தொடர்புடைய இடைத்தரகர் மிஷெல் கடந்த டிசம்பர் மாதம் துபையிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து, மிஷெலிடம் சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன. இப்போது அவர் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரைச் சந்திக்க அவரது நண்பர் ரோஸ்மேரியை அனுமதிப்பது தொடர்பான மனு சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுவான வருகையாளர் என்ற பிரிவில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் அரை மணி நேரம் கிறிஸ்டியன் மிஷெலை சந்திக்க ரோஸ்மேரியை அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.