ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் புதன்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் 12 மாணவர்கள் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புல்வாமா மாவட்டம், காகபோரா பகுதியிலுள்ள நர்பல் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் புதன்கிழமை சிறப்பு வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, பள்ளிக்குள் திடீரென நிகழ்ந்த வெடி விபத்தில் 10-ஆம் வகுப்பு பயிலும் 12 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.