புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தியது மிகவும் கோழைத்தனமான தாக்குதல்; அதற்கு உரிய பதிலடி தரப்படும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
லக்னெளவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
கடந்த நான்கரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் காஷ்மீரில் ஓரிரு இடங்கள் தவிர நாட்டில் வேறு எந்தப் பகுதியிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழவில்லை. தேசிய பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு எவ்விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாது. புல்வாமாவில் பயங்கரவாதிகள் மிகவும் கோழைத்தனமான தாக்குதலை நடத்தி நமது வீரர்களை கொலை செய்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு உரிய பதிலடி தரப்படும்.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் அனைவரும் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். தாக்குதலுக்கு ஆதரவு அளித்த நாடு (பாகிஸ்தான்) உள்பட எவரும் நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியாது. இதன் முதல்கட்டமாகவே பாகிஸ்தானைப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகரீதியாக தடை செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. காஷ்மீரில் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது என்றார் அவர்.
புல்வாமா தாக்குதல் காரணமாக மக்களவைத் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, "பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை என்பதும், நாட்டில் தேர்தல் நடத்துவதும் தனித்தனியான நிகழ்வுகள். இவை இரண்டுக்கும் எவ்வித நேரடித் தொடர்பும் இல்லை. எனவே, மக்களவைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று அவர் பதிலளித்தார்.