கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கிருபேஷ் (19) மற்றும் சரத் லால் (24) ஆகிய இரு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும் காசர்கூட் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக கேரளா முழுவதும் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் இளைஞர் காங்கிரஸால் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இப்படுகொலை சம்பத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் குற்றவாளிகளை பிடிக்கும் வரை ஓயப்போவதில்லை எனவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த படுகொலை சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில்,
கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் காங்கிரஸ் கட்சியை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இரு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் படுகொலையில் மட்டும் அவர்கள் ஈடுபடவில்லை. காசர்கூட், கன்னூர் பகுதிகளில் கம்யூனிஸ்ட், இதுபோன்று படுகொலைகளில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.