ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதல் வெற்றி அடைந்ததால், அதை விட மிகப் பயங்கரத் தாக்குதலை நடத்த ஜெய்ஷ்-இ-மொஹம்மது திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து பிப்ரவரி 16 - 17ம் தேதிகளில் ஜெய்ஷ் - இ - மொஹம்மது பயங்கரவாதிகள் காஷ்மீரில் இருக்கும் பயங்கரவாதிகளுடன் பேசிய தொலைபேசி உரையாடலை உளவுத் துறை ஒட்டுக்கேட்ட போது இந்த தகவல் கிடைத்துள்ளது.
இந்திய பாதுகாப்புப் படையினருக்கு மிகப்பெரிய உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் வகையில் மற்றொரு பயங்கரத் தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளது இதன் மூலம் உறுதி படுத்தப்பட்டுள்ளது.
இதனுடன் பல்வேறு வழிகளில் கிடைத்த புலனாய்வுத் தகவல்கள் குறித்து உளவுத் துறை அதிகாரி கூறியிருப்பதாவது, ஜம்மு காஷ்மீர் அல்லது ஜம்மு காஷ்மீருக்கு வெளியே மிகப் பயங்கர தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக 3 தற்கொலைப் படை வீரர்கள் உட்பட 21 ஜெய்ஷ்-இ-மொஹம்மது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் டிசம்பர் மாதத்திலேயே இந்தியாவுக்குள் ஊடுருவி விட்டதாகவும், இவர்கள் வெவ்வேறு இடங்களில் 3 பயங்கர தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்தியாவுக்குள் அடுத்தடுத்து பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி, இந்திய மக்களை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்பதே இந்த பயங்கரவாத அமைப்பின் நோக்கம் என்றும், இதனை முறியடிக்க பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் மூத்த காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.