தெலங்கானா மாநில விவசாயிகளுக்கு, மத்திய அரசின் உதவித் தொகையை தவிர்த்து, கூடுதலாக ரூ.10,000 உதவித் தொகை அளிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய அரசின் சார்பில் ஆண்டுக்கு ரூ.6,000 உதவித் தொகை அளிக்கும் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்படவுள்ளது. இந்நிலையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தெலங்கானா சட்டப்பேரவையில் அந்த மாநில அரசு தனது பட்ஜெட்டை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. அப்போது 2 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா ரூ.4,000 உதவித் தொகை என அறிவிக்கப்பட்டிருப்பதை தலா ரூ.5,000 ஆக உயர்த்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 2 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மாநில அரசால் ரூ.10,000 அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ சபிதா இந்திரா ரெட்டி கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்து சட்டப்பேரவையில் சந்திரசேகர் ராவ் சனிக்கிழமை பேசுகையில், "தெலங்கானா விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.10,000 உதவித் தொகை அளிக்கப்படும். மத்திய அரசின் உதவித் தொகைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. மத்திய அரசால் குறிப்பிட்ட அளவுக்கே உதவித் தொகை அளிக்கப்படுகிறது. அது மிகவும் குறைவாகும்' என்றார்.
விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்த கேள்விக்கு சந்திரசேகர் ராவ் பதிலளிக்கையில், "ஒரே தவணையாக கடனை தள்ளுபடி செய்யும் திட்டமில்லை' என்றார்.
தெலங்கானா அமைச்சரவையில் பெண்களுக்கு இடமளிக்கப்படாதது குறித்த கேள்விக்கு, 2 பெண்கள் அமைச்சரவையில் சேர்த்து கொள்ளப்பட இருக்கின்றனர் என்று சந்திரசேகர் ராவ் பதிலளித்தார்.