10-ஆவது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்கின் 350-ஆவது பிறந்ததினத்தையொட்டி, அவரது நினைவாக தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜன.13) நாணயம் வெளியிடுகிறார்.
மேலும், அவரது இல்லத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் மோடி உரையாற்ற உள்ளார்.
முன்னதாக, பிகார் தலைநகர் பாட்னாவில் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற குரு கோவிந்த் சிங்கின் பிறந்ததின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது குரு கோவிந்த் சிங் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டார்.
நாட்டுக்காக குரு கோவிந்த் சிங் செய்த தியாகங்களை நினைவுகூர்ந்த அவர், சீக்கியர்களைக் கொண்டு கல்சா என்னும் படைப் பிரிவை உருவாக்கி நாட்டின் ஒற்றுமையைக் காக்க எடுத்த முயற்சிகளையும் பாராட்டினார்.
தவறிழைக்காத அப்பாவி மக்களை மத தொந்தரவுகளில் இருந்து காப்பதே கடமை என்று கூறி கல்சா பிரிவை குரு கோவிந்த் சிங் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.