உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்காக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு கட்சித் தலைவர்களும் சனிக்கிழமை வெளியிட்டனர். இக்கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறவில்லை.
மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 இடங்களில் போட்டியிடுகின்றன. சிறிய கட்சிகளுக்கு இரு இடங்களை ஒதுக்கியுள்ளன.
எனினும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் போட்டியிடும் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என்று இரு கட்சிகளும் கூறியுள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் இடையே ஏற்பட்டுள்ள இந்த கூட்டணியானது இறுதி முடிவு இல்லை. தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த கூட்டணி தொடர்பாக மறுபரிசீலனை செய்யும் வாய்ப்புள்ளது. எனவே இந்த கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம். அதுபோன்று உத்தரப் பிரதேசத்தில் மிகப்பெரிய கூட்டணி அமைவது உறுதி.
தேவைப்பட்டால் காங்கிரஸ் கட்சி தனது சொந்த பலத்துடன் வருகிற நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவும் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.