உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்ப மேளாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரது மனைவியுடன் கங்கை பூஜையில் வியாழக்கிழமை பங்கேற்றார்.
12 ஆண்டுக்கு ஒருமுறை கும்ப மேளாவையொட்டி, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஹிந்துக்கள் புனித நீராடுவர். செவ்வாய்க்கிழமை தொடங்கிய கும்ப மேளாவின் முதல் நாளில் 1.40 கோடி பக்தர்கள் புனித நீராடினர். இதைதொடர்ந்து, நடைபெற்ற கங்கை பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவி சவிதா கோவிந்துடன் தனி விமானம் மூலம் பிரயாக்ராஜ் வந்தடைந்தார்.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி விமானம் மூலமாக பாம்ரோலி விமான நிலையத்திற்கு வந்த குடியரசுத் தலைவரை உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவி சவீதாவுடன் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்ற கங்கை பூஜையில் பங்கேற்றார். அவருடன், முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கேசவ பிரசாத் மெளரியா, சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் உள்பட பல்வேறு துறை அமைச்சர்களும் பங்கேற்றனர்.
கங்கை பூஜையில் அரைமணி நேரம் பங்கேற்ற அவர் பின்னர், முக்கிய சாதுக்கள் சிலரை சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். பின்னர் தனி விமானம் மூலம் மாலை 4.30 மணியளவில் அங்கிருந்து தில்லிக்கு கிளம்பிச் சென்றார்.