உள்ளாட்சித் தேர்தலை ஏன் இன்னும் நடத்தாமல் இருக்கிறீர்கள்? என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் 2016 ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதாலும், அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வருவதாலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது தாமதமாகி வருகிறது.
இதனிடையே முதல் கட்டமாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் வழிமுறைகள் குறித்து அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் ஜூலை 2ஆவது வாரத்தில் முடிய வாய்ப்பு இருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக மாநில தேர்தல் ஆணைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த உத்தரவிடுமாறு மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்ளாட்சித் தேர்தலை ஏன் இன்னும் நடத்தாமல் இருக்கிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மக்கள்தொகை கணக்கெடுப்புபடி தொகுதி மறுவரை செய்யும் பணி நடந்ததால்தான் தேர்தலை நடத்த முடியவில்லை என தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி பணிகளை எப்பொழுது செய்வீர்கள் என்பதை இரண்டு வாரத்திற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.