தண்ணீர் பிரச்னை விவகாரத்தில் தமிழக மக்கள் பற்றி கூறிய கருத்துக்கு கிரண் பேடி வருத்தம் தெரிவித்ததாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
சென்னையில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவையுடன் மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகுமுறையும் கூட காரணமாக உள்ளதாக தமிழக அரசையும், தமிழக மக்களையும் விமர்சனம் செய்து சமூக வலைதளத்தில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கருத்து தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த கருத்துக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு பதிலளித்த கிரண் பேடி, தான் பொதுமக்கள் பார்வையில்தான் கருத்து தெரிவித்ததாகவும் அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று விளக்கமளித்திருந்தார். இதனிடையே கிரண் பேடி விவகாரம் தமிழக சட்டப்பேரவையில் மட்டுமின்றி நாடாளுமன்றதிலும் எழுப்பப்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பாக மக்களவையில் திமுக உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக மக்கள் பற்றி கூறிய கருத்துக்கு கிரண் பேடி வருத்தம் தெரிவித்ததாக கூறினார்.