ஒடிஸாவில் 2018-ஆம் ஆண்டில் இடதுசாரி தீவிரவாதிகள் நிகழ்த்திய கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்றவை அதிகரித்து விட்டதாக மாநில உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
ஒடிஸா சட்டப்பேரவையில் உள்துறை நிலைக்குழுவின் அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஒடிஸாவில் கடந்த ஆண்டு தினமும் சராசரியாக ஏழு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதில் நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
2018-ஆம் ஆண்டு காவல் நிலையங்களில் 2,502 பாலியல் வன்கொடுமை மற்றும் 1,378 கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 1,07,408 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
2017-ஆம் ஆண்டில் 2,221 பாலியல் வன்கொடுமை மற்றும் 1,267 கொலைகள் என மொத்தம் 1,03,066 குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தது.
2019-ஆம் ஆண்டு மார்ச் வரையிலும், 28,617 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
2018 ஆம் ஆண்டு பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் இடையே 26 துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதில் 19 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்; 339 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 27 பேர் சரணடைந்தனர்.
"ஜஜ்பூர், தேங்கனல், கஜபதி, கஞ்சம், மயூர்பஞ்ச் மற்றும் கியோஞ்சர் மாவட்டங்களில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை, ஆனால் மல்கன்கிரி, கோராபுட், கலாஹந்தி, ராயகடா, கதாமல் மற்றும் நுவாபடா ஆகிய பகுதிகளில் நிலைமை சவாலாகவே இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.