மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாக அகில் ஏ.குரேஷியை நியமிக்கும் விவகாரத்தில், மத்திய அரசு காலந்தாழ்த்தி வருவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வரும் 22-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, குஜராத் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
குஜராத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான அகில் ஏ.குரேஷி, பணியிட மாறுதல் பெற்று தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். அவரை மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் குழு, மத்திய அரசுக்குக் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி பரிந்துரை செய்திருந்தது.
மற்ற உயர்நீதிமன்றங்களுக்கு கொலீஜியம் பரிந்துரைத்திருந்த தலைமை நீதிபதிகளுக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி ரவி சங்கர் ஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாகக் கடந்த ஜூன் மாதம் 7-ஆம் தேதி நியமித்தது. நீதிபதி குரேஷியின் பல்வேறு திறமைகளை ஆராய்ந்த பிறகே, மத்தியப் பிரதேசத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு கொலீஜியம் குழு அவரைப் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு காலந்தாழ்த்தி வருகிறது. இது நீதித்துறையின் சுதந்திரம் மீது மத்திய அரசு நடத்தும் தாக்குதலாகும். எனவே, கொலீஜியம் குழுவின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, வழக்கின் விசாரணை வரும் 22-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்த நீதிபதிகள், மனுவின் நகலை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் வழங்குமாறும் மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.