ராஜஸ்தானில் கும்பல் கொலை மற்றும் ஆணவக் கொலை சம்பவங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்படும் என்று அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில பட்ஜெட் மீதான விவாதம், அந்த மாநில சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, முதல்வர் அசோக் கெலாட் பேசியதாவது:
கும்பல் கொலை மற்றும் ஆணவக் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. கும்பல் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்றுவதற்கு, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. அதேபோல், ராஜஸ்தானிலும் கடுமையான சட்டம் இயற்றப்படும்.
ஆணவக் கொலைகளைத் தடுக்க..: சிரோஹி மாவட்டத்தில் கலப்பு திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியர் அண்மையில் ஆணவக் கொலை செய்யப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவும் கடுமையான சட்டம் கொண்டுவரப்படும். நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களில் சுமார் 26,000 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. எனவே, எம்எல்ஏக்கள் கட்சி வேறுபாடுகளை கடந்து, பெண்களின் பாதுகாப்புக்காக பாடுபட வேண்டும்.
பாஜக மீது தாக்கு: ராஜஸ்தானில் முந்தைய பாஜக அரசு, அதற்கு முன்பிருந்த காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை முடக்கியது. ஆனால், நாங்கள் அவ்வாறு செயல்படமாட்டோம்.
முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த திட்டங்களை முடக்கமாட்டோம். ரூ.26,000 கோடி வருவாய் பற்றாக்குறையுடன் மாநிலத்தை முந்தைய பாஜக அரசு விட்டுச் சென்றுள்ளது என்றார் கெலாட்.