இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அரசு தரப்பு வட்டாரங்கள் கூறியதாவது:
இந்தியாவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி சில மணி நேரங்கள் மட்டும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்த பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசவுள்ளார். இதை தவிர்த்து, வேறு முக்கிய சந்திப்புகள் எதற்கும் திட்டமிடப்படவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் நடைபெறுவதற்கு 8 நாள்களுக்கு முன்னதாக, இந்தியாவுக்கு நெதன்யாகு சுற்றுப்பயணமாக வருகை தரவுள்ளார். முன்னதாக, இஸ்ரேல் நாட்டின் பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற சாதனையை நெதன்யாகு கடந்த 20ஆம் தேதி படைத்தார்.