அமர்நாத் யாத்திரை நிறைவடைந்த பிறகே, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் இன்று (செவ்வாய்கிழமை) தெரிவித்தது.
ஜம்மு காஷ்மீரில் பிடிபி-பாஜக கூட்டணி ஆட்சி அமைத்து வந்தது. இந்த நிலையில், பிடிபிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக கடந்தாண்டு ஜூன் 19-ஆம் தேதி திரும்பப் பெற்றது. இதையடுத்து, அங்கு 6 மாதங்கள் ஆளுநர் ஆட்சி நடைபெற்றது. ஆளுநர் ஆட்சியும் கடந்தாண்டு டிசம்பருடன் நிறைவடைந்ததையடுத்து, தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது.
17-வது மக்களவைத் தேர்தலோடு காலியாகவுள்ள சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், பாதுகாப்புக் காரணம் கருதி ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. எனினும், மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அமர்நாத் யாத்திரை நிறைவடைந்த பிறகே காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்தது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"ஜம்மு காஷ்மீரில், இந்த ஆண்டு கடைசியில் தேர்தல் நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் ஒருமனதாக முடிவு எடுத்துள்ளது. அங்கு உள்ள நிலைமை குறித்து தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வரும். தேவையான பாதுகாப்புத் தரப்புகளிடம் இருந்து தகவல்கள் பெறப்படும். அமர்நாத் யாத்திரை முடிவடைந்த பிறகு, காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமர்நாத் யாத்திரை ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 15-ஆம் தேதி நிறைவடைகிறது.