குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜக எம்.பி.யாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர்கள் ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றனர். இதனால் அவர்கள் தற்போது மக்களவை எம்.பி.யாகி விட்டனர்.
இதனையடுத்து மாநிலங்களவையில் அவர்கள் வகித்த 3 எம்.பி. பதவிகளும் காலியாகவுள்ளன. நாடாளுமன்ற எம்.பி.க்களாக இல்லாத எஸ். ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். இதனால் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற எம்.பி.யாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் பாஜகவும், பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஆட்சியிலுள்ளன. எனவே குஜராத்தில் இருந்து பாஜக எம்.பி.யாக எஸ். ஜெய்சங்கரையும், பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ராம்விலாஸ் பாஸ்வானையும் தேர்வு செய்ய பாஜக திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.