மோசடி வழக்கில் சாட்சி என்ற முறையில் கோவா மாநிலம் பனாஜி நீதிமன்றத்தில் மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் புதன்கிழமை நேரில் ஆஜரானார்.
மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் முன்னாள் உதவியாளர் என்று தெரிவித்துக் கொண்டு வினோத் தேசாய் என்ற நபர் மோசடி செய்துள்ளார். கோவாவில் அரசு வேலை வாங்கி தருவதாக மெர்வின் பெர்ணான்டஸ் என்பவரிடம் அவர் ரூ.2 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் வாக்குறுதியின்படி வேலை வாங்கித் தரவில்லை.
இதையடுத்து கோவா காவல்துறையில் தேசாய்க்கு எதிராக பெர்ணான்டஸ் புகார் அளித்தார். அதன்பேரில் தேசாய் மீது கோவா போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், பனாஜி நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அமைச்சர் நாயக்குக்கு சாட்சி என்ற முறையில் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இதையேற்று, பனாஜி நீதிமன்றத்தில் மத்திய அமைச்சர் நாயக் புதன்கிழமை நேரில் ஆஜரானார்.
அப்போது நீதிபதியிடம், தேசாய் ஒருபோதும் தம்மிடம் பணியாற்றவில்லை என்றும், அவரது தந்தைதான் தம்மிடம் பணியாற்றினார் என்றும் மத்திய அமைச்சர் நாயக் தெரிவித்தார். கோவா காவல்துறைக்கு இதுதொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தாம் கடிதம் எழுதியிருப்பதாகவும் நாயக் குறிப்பிட்டார்.