2005-இல் நிகழ்ந்த அயோத்தி பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐவரில் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவரை விடுதலை செய்தும் பிரயக்ராஜ் சிறப்பு நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) தீர்ப்பு வழங்கியது.
2005 ஜூலை 5-ஆம் தேதி அயோத்தி ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி வளாகத்தில் பாதுகாப்பை மீறி 5 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இவர்களை தடுத்து நிறுத்தி சிஆர்பிஎஃப் பதிலடி தந்தனர். இந்த சண்டை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அதன் முடிவில் 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ரமேஷ் பாண்டே மற்றும் சாந்தி தேவி ஆகிய இரண்டு பேரும் உயிரிழந்தனர். சிஆர்பிஎஃப் வீரர்கள் 7 பேர் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர்.
இந்த குற்றச் சம்பவத்துக்கு சதித் திட்டம் தீட்டியதாக ஐவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை பிரயக்ராஜ் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த நிலையில், 14 வருடங்களுக்குப் பிறகு வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வெளியானது. இதில், 4 முக்கியக் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 5-வது குற்றவாளி முகமது ஆசிஸ் விடுவிக்கப்பட்டார்.