தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தில்லியில் தீன்தயாள் உபாத்யாய மார்க் சாலையில் பாஜகவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது கண்டறியப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டலால் பாஜக அலுவலத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மைசூரில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு குறித்து தில்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.