அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்-ஐ பயன்படுத்தி, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இயங்குவதால், அந்த இரு நிறுவனங்களும் கடும் இழப்பை சந்தித்து வருவதாக பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தனது சுட்டுரைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களிடம் எந்த பிரச்னையும் இல்லை.
இந்த பொதுத்துறை நிறுவனங்களை பயன்படுத்தி, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இயங்குகின்றன.
மேலும், இவ்விரு நிறுவனங்களுக்கும் 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யாமல், மற்ற தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடனுதவியும் புரிகிறது.
ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு எந்தவிதமான கடனுதவியும் வழங்க அரசு மறுக்கிறது. செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கான முதலீடு உள்பட அரசுத்தரப்பில் இருந்து எவ்வித முதலீடும் செய்யப்படுவதில்லை.
நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். கடந்த 2013-14ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் எம்டிஎன்எல் மூலம் நிகர லாபம் ரூ.7,838 கோடி. தற்போதைய பாஜக அரசில் 2019ல் எம்டிஎன்எல் மூலம் நிகர இழப்பு ரூ.3,390 கோடியாக உள்ளது.
தனியார் நிறுவனங்களான ஐஎல்எஃப்எஸ், ஐடிபிஐ மற்றும் ஜிஎஸ்பிசி இயங்க பொதுநிதி வழங்கும்போது, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு மட்டும் அதை வழங்க மறுப்பது ஏன்? என்று கூறியுள்ளார்.
எம்டிஎன்எல் நிறுவனம் தில்லி, மும்பை தவிர நாடு முழுவதும் 20 தொலைத்தொடர்பு வட்டாரங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறது. ஆனால், இந்த நிறுவனம் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருவதோடு, அதிலிருந்து மீள்வதற்கான அறிகுறியே இல்லாமல் உள்ளது.
இருப்பினும், பிஎஸ்என்எல் நிறுவனம் 2014-15ஆம் ஆண்டில் ரூ.672 கோடியும், 2015-16ஆம் ஆண்டில் ரூ.3,885 கோடியும், 2016-17ஆம் ஆண்டில் ரூ.1,684 கோடி வீதம் லாபம் ஈட்டியுள்ளது.
அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களை நஷ்டத்தில் இருந்து மீட்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிஎஸ்என்எல் பொறியாளர் மற்றும் அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும், பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கையும் எழுந்துள்ளது.