மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீல் இதனைத் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை இது தொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் கூறியதாவது:
கடந்த 2015-ஆம் ஆண்டில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 918 வெளிநாட்டவர், இந்தியாவுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக வந்தனர். 2016-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 4 லட்சத்து 27 ஆயிரத்து 14 ஆகவும், 2017-ஆம் ஆண்டில் இது 4 லட்சத்து 95 ஆயிரத்து 56 ஆகவும் அதிகரித்தது. இந்தியாவில் மருத்துவச் சிகிச்சைகள் தரமாகவும், வெளிநாடுகளைவிட குறைந்த செலவிலும் அளிக்கப்படுகிறது என்பது சர்வதேச அளவில் அறியப்பட்டுள்ளது.
எனவேதான் வெளிநாட்டவர் பலர் நமது நாட்டுக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். மருத்துவச் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க சிறப்புத் திட்டத்தை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் வகுத்துள்ளது என்று கூறியுள்ளார்.