ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் "இந்தியாவுக்கு எதிரான புனிதப் போர்' என்ற முழக்கம்தான் இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 20ஆண்டுகளில் இரண்டு முறை போர் விளிம்பு வரை சென்றதற்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப் பேரவை வளாகத்தில் தாக்குதல், உரியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் தாக்குதல், பதான்கோட் விமானப் படை தளத்தில் தாக்குதல் என கடந்த 20ஆண்டுகளில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு கொடூரமானத் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளன.
நாடாளுமன்றத்தில் கடந்த 2001ஆம் ஆண்டில் அந்த அமைப்பு தாக்குதல் நடத்தியபோதும், கடந்த மாதம் பிப்ரவரி 14ஆம் தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட போதிலும் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் சூழல் உண்டானது.
அல்-காய்தா அமைப்புடன் நெருங்கிய நட்பு பாராட்டி வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு, இந்தியா-பாகிஸ்தானின் நல்லுறவை மனதில் கொள்ளாமல், கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி, பாகிஸ்தானின் ஒகாரா மாவட்டத்தில் நடைபெற்ற மாநாட்டில் "இந்தியாவுக்கு எதிரான புனிதப் போர்' தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.
கடந்த 1999ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கந்தகாரில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டு, பயங்கரவாதி மசூத் அஸாரை இந்தியா விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் விடுவிக்கப்பட்டார்.
அதன்பிறகே ஜெய்ஷ்-ஏ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பை மசூத் அஸார் தொடங்கினார்.
அப்போது முதல் பல்வேறு தாக்குதல்களை இந்தியாவில் அந்த அமைப்பு முன்னெடுத்து வருகிறது.
கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் முதல்வராக குலாம் நபி ஆஸாத் பதவியேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி ஸ்ரீநகரில் தற்கொலை தாக்குதலை முன்னெடுத்தார். இதில், 10 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.