குழந்தையை கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர், சிறையில் எழுதிய சீர்திருத்த கவிதைகளை மேற்கோள்காட்டி, உச்சநீதிமன்றம் அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ். அப்துல் நஸீர், எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட அமர்வு கூறியதாவது: தியானேஷ்வர் சுரேஷ் பார்கர் கடந்த 18ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருகிறார். அவர் செய்த தவறை உணர்ந்துவிட்டார். இது, அவர் சிறையில் இருந்தபடியே எழுதிவரும் கவிதைகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. அவரது நன்னடத்தையையும் கருத்தில் கொண்டு, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கிறோம் என்று அந்த அமர்வு உத்தரவிட்டது.
தியானேஷ்வர் சுரேஷ் பார்கர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞர், "அவர் சிறந்த மனிதராகிவிட்டார். அவர் கவிதைகளும் எழுதியிருக்கிறார். அவற்றை படிக்கும்போது அவர் மனம் திருந்தியிருப்பதை உணர முடிகிறது. எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்' என்று வாதத்தை முன்வைத்தார். மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் குழந்தையை கொலை செய்ததற்காக கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.