மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலிலை தேசியவாத காங்கிரஸ் வியாழக்கிழமை வெளியிட்டது. அக்கட்சியின் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக, அதிக மக்களவைத் தொகுதிகளை(48) கொண்ட மகாராஷ்டிர மாநிலத்துக்கு வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி, 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 26 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும் போட்டியிடுகிறது.
முன்னதாக, காங்கிரஸ் சார்பில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சி முதல்கட்டமாக, 12 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அதை வெளியிட்டார்.
கட்சியின் முக்கிய தலைவர்களான, நீர்பாசனத்துறை முன்னாள் அமைச்சர் சுனில் தாக்கரே(ராய்கட்), ஆனந்த் பரான்ஜே(தாணே), சுப்ரியா சுலே(பாராமதி) உள்பட 12 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
சரத் பவாரின் கோட்டையாக இருந்த பாராமதி தொகுதியில், கடந்த 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் சுப்ரியா போட்டியிடுகிறார்.