ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் சிறப்பு பெண் போலீஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில் புகுந்த பயங்கரவாதிகள் அவரை சுட்டுக் கொன்றதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
ஷோபியான் மாவட்டம் வெஹில் பகுதியில் உள்ள சிறப்பு பெண் போலீஸ் அதிகாரி குஷ்பூ ஜன் வீட்டினுள் சனிக்கிழமை பகலில் புகுந்த பயங்கரவாதிகள், அவரை துப்பாக்கியால் சுட்டு தப்பிச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு, அருகாமையிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெஹ்பூபா முஃப்தி, ஓமர் அப்துல்லா கண்டனம்: இதனிடையே, பயங்கரவாதிகளின் கொடூரசெயலுக்கு மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹ்பூபா முஃப்தி கண்டனம் தெரிவித்து, சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்த கொடூரமான கொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல் அதிகாரி குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மாநாட்டுக்கட்சி துணைத்தலைவர் ஒமர் அப்துல்லா வெளியிட்டுள்ள சுட்டுரைப்பதிவில், பயங்கரவாதிகளின் கொடூரமான இச்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும், மற்றவருக்கும், ஜம்மு-காஷ்மீர் போலீஸாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.