காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக் காலத்தில், கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் வருமானம் அதிகரித்திருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
2004ஆம் ஆண்டில் ராகுலின் வருமானம் ரூ.55லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது. அது 2014இல் ரூ.9 கோடியாக அதிகரித்தது. இது அவர் தேர்தலில் போட்டியிட அளிக்கப்பட்ட வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2004 மக்களவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் வருமானம் ரூ.55,38,123 என்று குறிப்பிட்டுள்ளார். 2009இல் ரூ.2 கோடி என்றும் 2014இல் ரூ.9 கோடி என்றும் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். எம்.பி.யாக இருக்கும் ஒருவரால் எவ்வளவு வருமானம் ஈட்ட முடியும் என்பதை அறிவோம். எப்படி இவ்வளவு பெரிய தொகையை ஈட்டினார் என்று பதிலளிக்க வேண்டும்.
2ஜி அலைக்கற்றை ஊழலில் சம்பந்தப்பட்ட யுனிடெக் நிறுவனத்திடம் இருந்து 2 சொத்துகளை ராகுல் வாங்கினாரா? இல்லையா? என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.